Tuesday, September 22, 2009

நிலம் யாருக்குச் சொந்தம்?

பினாங்கில், கம்போங் பாலா நில விவகாரம் குறித்து இது வரைக்கும் எந்த கருத்தையும் நான் கூறவில்லை. இதற்கு ஒரு காரணம், அந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பல கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே, என்னால் அவ்வளவாக எதனையும் கூற இயலவில்லை.

பார்க்கப்போனால், அந்த விவகாரம் குறித்து தெரிவிக்கப்பட்ட பெரும்பாலான கருத்துக்கள் யாவும் உணர்ச்சிகரமானதாக உள்ளன. எடுக்கப்பட்ட அணுகுமுறையில், ஏழை இந்திய நில உரிமையாளர்கள், சக்திவாய்ந்தவர்களால் ஒடுக்கப்படுகின்றனர். அதோடு, பினாங்கு அரசாங்கம், பக்காத்தான் ராயாட் அரசாங்கம் என்பதால், அது, அந்த மக்களை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளது. பக்காத்தான் அரசாங்கம், மேம்பாட்டாளர் “பக்கம் சாய்வதை” விடுத்து, மக்களுக்காகப் போராடும் என்று அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

சிலர், லிம் குவான் எங்கையும் சாடினர். முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தின் முடிவை குவான் எங் மாற்ற வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். பக்காத்தான் ராயாட் முதலமைச்சர், அதுவும் ஜசெகவைச் சேர்ந்தவர், ஏன் மக்கள் “போராட்டவாதி”யாக மாறவில்லை என்பதைத்தான் அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை.

அந்த நாளில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நான் நினைவு கூறுகிறேன். அப்போது, எனது தாத்தாவின் நிலத்தை அரசாங்கம் எடுத்து கொண்டது. அந்த கட்டத்தில், அவர் பினாங்கு கவர்னராக இருந்தார். கோலாலம்பூரில் உள்ள பூமலையில், ஒரு துண்டு நிலத்தில், தமது ஓய்வு இல்லத்தை அவர் அப்போதுதான் கட்டி முடித்தார்.

இருப்பினும், மலேசியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டுவதற்கு அந்த துண்டு நிலமும், அதைச் சுற்றிலும் உள்ள நிலமும் அரசாங்கத்துக்கு தேவைப்பட்டது. ஆக, அந்த மலைப்பகுதியில் உள்ள அனைத்து நிலத்தையும் அரசாங்கம் எடுத்துக் கொண்டது. சுவரில் பூசப்பட்ட சாயம் காய்வதற்கு முன்னரே, எனது தாத்தா, தமது ஓய்வு இல்லத்தை இழந்தார்.

அந்த வீட்டை அழகுப்படுத்துவதில், இறுதி வடிவம் கொடுக்கப்பட்டதையும் நான் பார்த்தேன். சிறிது காலத்துக்குப் பின்னர், அந்த வீடு முற்றாக இடித்து தள்ளப்பட்டது.

எனது தாத்தா, பினாங்கு கவர்னராக இருக்கலாம், ஆனால் அவரது நிலத்தை அரசாங்கம் எடுக்க விரும்பினால், அது குறித்து எதையும் செய்ய முடியாது.

கடந்த 50ஆண்டுகளில், பல துண்டு நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்தியதை நான் பார்த்துள்ளேன். அவற்றில் சில, எனது நண்பர்களுக்கும் குடும்பங்களுக்கும் சொந்தமானவை. எனது சொந்த நிலத்தையும் கூட அரசாங்கம் கையகப்படுத்தியது.

துரதிஷ்டவசமாக, நம்முடைய நிலத்தை அரசாங்கம் எடுக்க விரும்பினால், நம்மால் எதையும் செய்ய முடியாது. தேசிய நிலச் சட்டத்தின் கீழ், நாம் நில வரியைச் செலுத்தும் வரைக்கும், அரசாங்கத்துக்கு தேவைப்படாதவரைக்கும், அந்த நிலம் மீதான உரிமையை நாம் கொண்டுள்ளோம். அரசாங்கத்துக்கு தேவைப்படும்போது, நம்முடைய நிலம் மீதான உரிமையை நாம் இழக்கிறோம். அது, குடும்பத்தில் எத்தனை தலைமுறைக்கும் இருந்திருக்கலாம்.

உண்மையில், நிலம் மீதான நமது உரிமை, அங்கீகரிக்கப்பட்ட பயனீடு இருக்கும்வரைதான். அந்த பயனீட்டை நாம் மாற்றவிரும்பினால், அதற்கு நாம் விண்ணப்பிக்க வேண்டும். நில மாற்றத்துக்கு அரசாங்கம் அங்கீகரித்தால்தான், பயன்பாட்டை நாம் மாற்றலாம்.

எனவே, விவசாய நிலம், விவசாய நோக்கத்துக்காக மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும். அதுவும் நெல் நடவுக்காக இருந்தால், அங்கு நெல்தான் பயிர் செய்யலாம். மற்ற பயிர்களை சாகுபடி செய்ய முடியாது.

சுருங்கக் கூறின், நிலம் நமக்குச் சொந்தமானது என நாம் கருதினாலும்கூட, “நம்முடைய” நிலத்தில் விருப்பம்போல் நாம் எதையும் செய்து விடமுடியாது.

மேலும், நிலத்துக்கான நமதுரிமையை கூறவேண்டுமானால், அதற்கு ஆறடி மேலும், ஆறடி கீழும் வரைக்கும்தான். எனவே நம்முடைய நிலத்தில் 100அடிக்குக் கீழ், நாம் எண்ணெயை கண்டு பிடித்தால், அந்த எண்ணெய் நமக்குச் சொந்தமானதல்ல. ஆனால் அது அரசாங்கத்துக்குச் சொந்தமானது. நம்முடைய நிலத்துக்கு உயரே எந்த விமானமும் பறந்து செல்வதையும் நம்மால் தடுக்க முடியாது. காரணம், நமது நிலத்தில், ஆறடி உயரத்துக்கு மேல் உள்ள வான்பகுதி, நமக்குச் சொந்தமானதல்ல. ஆனால் அரசாங்கத்தினுடையது. உண்மையில், நிலத்தை நிரப்புவதற்கு அல்லது சமப்படுத்துவதற்கும் கூட, அரசாங்கத்தின் ஒப்புதல் உங்களுக்குத் தேவைப்படுகிறது.

இது என்னுடைய எளிய விளக்கம். இதில் முக்கியமானது என்னவென்றால், நம் வசமுள்ள நிலம் நமக்குச் சொந்தமானதல்ல. அந்த நிலத்தைப் பயன்படுத்தும் உரிமையைதான் நாம் கொண்டுள்ளோம். அந்த நிலம் அரசாங்கத்துக்குச் சொந்தமானது. அதை எப்போது வேண்டுமானாலும் அரசாங்கம் நம்மிடமிருந்து எடுத்துக் கொள்ளலாம்.

ஆனால், அரசாங்கமும், நம்முடைய நிலத்தை அப்படியே எடுத்து விட முடியாது. அதற்கான காரணம் இருக்க வேண்டும். சமுதாயத்தின் தேவைகளுக்காக, நிலத்தை மேம்படுத்துவதற்கு அந்த நிலம் தேவைப்படுகிறது என்பதுதான், அந்த காரணமாக இருக்க வேண்டும். ஆக, சமுதாயம் பயனடைவதற்காக, தனிப்பட்டவர்களான நாம், நமது நிலத்தை இழக்க வேண்டும்.

என்றபோதிலும் 25ஆண்டுகளுக்கு முன்னர், திரெங்கானு அரசாங்கம் பேரளவிலான நிலங்களை எந்த நோக்கமுன்றி அப்படியே எடுத்துக் கொண்டதை நான் நினைவு கூர விரும்புகிறேன். அந்த காலக் கட்டத்தில், மாநில அரசாங்கம், நிறைய பணத்தை ரொக்கமாக வைத்திருந்தது. அதை எப்படி செலவழிப்பது என்பதும் அதற்குத் தெரியவில்லை - அது பெற்றுக் கொண்ட எண்ணெய் உரிமப் பணத்துக்கு நன்றி - எனவே, விருப்பம்போல் நிலங்களை அவர்கள் பெற்றுக் கொண்டனர். எதிர்கால மேம்பாட்டு நோக்கங்களுக்காக, மாபெரும் நிலப் பொருளகமொன்றை அவர்கள் நிர்மாணித்தனர்.

அந்த நிலங்களைப் பெற்றுக் கொண்ட பின்னர், அவற்றை என்ன செய்வது என்று அரசாங்கத்துக்குத் தெரியவில்லை. அனைத்து நிலங்களும் மலாய்க்காரர்களுக்குச் சொந்தமானவை. ஆனால், வேறு வழியின்றி அந்த மலாய்க்காரர்கள் தங்களது நிலங்களை ஒப்படைத்தனர். அவர்களில் பெரும்பாலோர், தங்களது வாழ்வாதாரத்தை இழந்த நெல் விவசாயிகள். அவர்களுக்கு வழங்கப்பட்ட பணமும் விரைவில் கரைந்தது. அந்த நிலங்கள், அவர்களிடம் இருந்திருந்தால், நெற்பயிரீட்டை அவர்கள் தொடர்ந்திருக்கலாம்.

ஒன்றை மட்டும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசாங்கம் நிலத்தை இலவசமாக எடுத்துக் கொள்ள முடியாது. நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அந்த இழப்பீட்டுத் தொகையும், சந்தை மதிப்பு மற்றும் நமக்கு ஏற்படும் இழப்புக்களுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

ஆக, நம்முடைய நிலத்தை கையகப்படுத்தும்போது, அரசாங்கத்தை நம்மால் எதிர்க்க முடியாது என்றாலும், நமக்கு எவ்வளவு இழப்பீடு கொடுக்கப்படுகிறது என்பதை நாம் ஆட்சேபிக்கலாம்.

அரசாங்கம் நமது நிலத்தை எடுத்துக் கொள்ளும்போது, அது வழங்கும் இழப்பீட்டுத் தொகையை ஏற்கப்போவதில்லை என்று நாம் கூறி விட முடியாது. அந்த இழப்பீட்டை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் “ஆட்சேபத்தின்கீழ்” இழப்பீட்டுத் தொகையை ஏற்கிறோம் என குறிப்பிடும்படி, நாம் கேட்டுக் கொள்ள வேண்டும். பின்னர், அதிக இழப்பீடு வழங்கும்படி, நீதிமன்றம் உத்தரவிட வேண்டுமென நாம் மனு செய்ய வேண்டும்.

எடுத்துக்காட்டாக, நம்முடைய பத்தாயிரம் சதுர அடி நிலத்தை அரசாங்கம் எடுத்துக் கொண்டு, இழப்பீடாக ஒவ்வொரு சதுர அடிக்கும் 50 ரிங்கிட்டை அது வழங்கியிருக்கலாம். இது மிகவும் குறைவு என நாம் கருதுகிறோம். உண்மையில், சந்தை மதிப்புக்கு ஏற்ப, ஒவ்வொரு சதுர அடிக்கும் 120 ரிங்கிட் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அடுத்து, நமது நிலத்தில் இன்று நாம் ஒரு வீட்டைக் கட்டியிருந்தால் அதன் மதிப்பு குறைந்தது ரிம 350,000.00 ஆக இருக்கலாம்.

ஆக, இழப்பீடு தொகையை எதிர்த்து, நாம் நீதிமன்றம் போகலாம். நீதிமன்றம், நமது வாதத்தை ஏற்றுக் கொண்டால், அப்போது அரசாங்கம், ஒரு சதுர அடிக்கு 70 ரிங்கிட் வேறுபாட்டை நமக்கு செலுத்த வேண்டும். அதோடு அந்த வீட்டுக்காக 350,000.00 ரிங்கிட்டையும் அது வழங்க வேண்டும்.

ஆனால் ஒவ்வொரு சதுர அடிக்கும் 50ரிங்கிட் இழப்பீட்டுத் தொகையை முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை நாம் மறுக்கமுடியாது. அந்த இழப்பீட்டுத் தொகையை ஏற்றுக் கொள்ள நாம் மறுத்தால், கூடுதல் தொகைகை கோர முடியாது. ஆனால் அந்த இழப்பீடை நாம் ஏற்றுக் கொள்ளும்போது, அது குறித்த பத்திரங்களில், அதனை ஆட்சேபத்தின்பேரில் ஏற்றுக் கொள்வதாக நாம் குறிப்பிட வேண்டும். அப்போதுதான் கூடுதல் தொகை கோரி நீதிமன்றம் செல்லலாம்.

கம்போங் புவா பாலா நிலத்தை பினாங்கு அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ள முடியுமா, முடியாதா என்பது பிரச்னையல்ல. அதனால் எடுத்துக் கொள்ள முடியும். ஒன்றை மட்டும் நம்மால் வாதிட முடியும். அதாவது, சரியான நடைமுறைகளைப் பின்பற்றி, அரசாங்கம் அந்த நிலத்தை கையகப்படுத்தியதா என்பதை நம்மால் வாதாட முடியும். அடுத்து, நாம், அந்த நிலத்தின் சட்டப்பூர்வமான உரிமையாளராக இருந்தால், வழங்கப்படும் இழப்பீடு மிகக் குறைவானது எனக் கருதினால், அதனை எதிர்க்கலாம்.

மேலும் தார்மீக அம்சங்களிலிருந்து சட்ட அம்சங்களை பிரிக்க வேண்டியதும் அவசியம். அந்த நிலத்தை கையகப்படுத்துவதற்கு அரசாங்கம் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டிருக்கலாம், அதுவும் நடைமுறைகளைப் பின்பற்றி அதனைப் பெற்றிருக்கலாம். ஆனால் அந்த நிலத்தை அவர்கள் கையகப்படுத்துவது தார்மீக ரீதியில் சரியா? ஒட்டுமொத்த சமுதாயமும் பயன்பெறுவதற்கு, மேம்பாட்டு நோக்கங்களுக்காக அந்த நிலம் பெறப்படுகிறதா? அல்லது அதிலிருந்து, யாரோ ஒருவர் ஆதாயம் ஈட்டி, பெரும் பணக்காரராகுவதற்கு அது ஆர்ஜிதம் செய்யப்படுகிறதா?

சுருங்கக் கூறினால், அந்த விவகாரத்தின் நோக்கம் ஆராயப்பட வேண்டும். சட்டப்படி அது சரியானதாக இருக்கலாம். ஆனால் தார்மீக அடிப்படையில், அது சரியில்லாமல் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, ரோஸ்மா மன்சூரை நீங்கள் குறைகூறியதற்காக விசாரனையின்றி பத்தாண்டுகளுக்கு உங்களை சிறையிலடைப்பதற்கு தடுப்புக் காவல் ஆணையில் கையெழுத்திடுவதற்கு அமைச்சருக்கு சட்டப்பூர்வமான உரிமை உண்டு. ஆனால் சட்டப்பூர்வமாக அவர் செய்துள்ளபோதிலும் தார்மீக ரீதியில் அது சரியா?

இதைதான், கம்போங் புவா பாலா விவகாரத்தில் விவாதிக்க வேண்டும். ஒரு பெரிய நோக்கத்துக்காக நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதென்றால் பின்னர் இரண்டாவது கட்டத்துக்கு நாம் செல்ல வேண்டும். அந்த இரண்டாவது கட்டம் என்னவென்றால், அந்த நில உரிமையாளர்கள், நிலப்பட்டாக்களை கொண்டிராத புறம்போக்கு குடிசைவாசிகளாக இருந்தாலும்கூட அவர்களுக்கு முறையான இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதா என்பதாகும்.

துரதிஷ்டவசமாக, முன்னேற்றப் பாதையில் நாம் தடங்கலாக நிற்க முடியாது. ஆனால் முன்னேற்றத்தினால், நாம் பாதிப்படையக்கூடாது. சில வேளைகளில் சாலைகளை விரிவாக்கி, பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும் அவர்கள் கட்டும்போது, மேம்பாட்டுக்காக நாம் வழிவிட வேண்டியுள்ளது. ஆனால் நமது இழப்புக்காக சரியான தொகை வழங்கப்பட வேண்டும். நாம் ஏமாறக் கூடாது.

“நாட்டை மேம்படுத்துங்கள், ஆனால் எனது நிலத்தை தொடாதீர்கள்,” என்று நீங்கள் வாதிட்டால், அப்போது மேம்பாடுகள் இருக்காது. காரணம், பெரும்பாலும் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட பகுதிகளில்தான் மேம்பாடுகள் இருக்கும். யாருக்கும் சொந்தமில்லாத, ஒதுக்கப்பட்ட அடர்ந்த காட்டுப் பகுதிகளில் அல்ல.

கம்போங் புவா மக்கள், தங்களது நிலத்தை இழந்த முதல் மக்கள் அல்ல - இறுதியானவர்களும் அல்ல. பினாங்கு நெரில்மிகுந்த ஒரு மாநிலம். பெரும்பாலான நிலங்களும் இனியும் அரசாங்கத்துக்குச் சொந்தமானதல்ல. பினாங்கை தொடர்ந்து மேம்படுத்துவது என்பது, தனியார் நிலத்தை அது பாதிக்கும் என பொருள்படும். ஆக, பினாங்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்? எல்லா மேம்பாட்டுப் பணிகளையும் நிறுத்த வேண்டுமா?

நன்றி: தி மலேசியா டுடே - raja petra

No comments:

Post a Comment