Tuesday, January 18, 2011

திட்டமிட்ட இன இழிவு!

தென்னிந்தியர்களைப் பறையா என்று குறிப்பிடும் வாசகத்தைக் கொண்ட ஒரு நூலை ஐந்தாம் படிவ மாணவர்களுக்குப் பாட நூலாக வைத்திருப்பது தென்னிந்தியர்களைத் திட்டமிட்டு இழிவுபடுத்தும் செயல் அன்றி வேறு இல்லை. (- முனைவர் ஆறு. நாகப்பன்)

மேலும், மனித உணர்வையும் நாகரீகத்தையும் நயம்படக் கூறுவதே இலக்கியத்தின் நோக்கம். குறிப்பிட்ட ஓர் இனத்தை இழிவுபடுத்தும் நோக்கத்தில் இலக்கியத்தைப் பயன்படுத்துவதும் இப்படிப்பட்ட கீழ்த்தரமான இலக்கியப் பகுதிகளைத் தேர்வுக்காக மாணவர்கள் படிக்கும் கட்டாயத்தை ஏற்படுத்துவதும் கல்வி உலகின் நாகரீகமல்ல.

ஐந்தாம் படிவ மலாய் இலக்கியப் பாடத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் இண்டர்லோக் என்னும் இப்பாட நூலில் மலேசியாவுக்குத் தென்னிந்தியர் வருகை பற்றிய வரலாற்றுப் பின்னணியிலான குறுநாவல் ஒன்று உள்ளது. இக்கதையின் தலைவன் பறையா என்னும் சாதிப்பிரிவைச் சேர்ந்தவன் என்று அறிமுகப்படுத்தப்படுகின்றான்.

கேரளாவிலிருந்து பல நகரங்களைக் கடந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் கப்பலேறி பினங்கு துறைமுகத்திற்கு வருவதாகக் கதை. இப்படி வருகிறவர்களில் பலர் பறையர் என்பதால் அவர்கள் ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு வருவதற்குப் பயப்படவில்லை என்றும் கப்பலில் ஆடுகளைப் போல் இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர் என்றும் இவர் எழுதியுள்ளார்.

மேலும் தென்னிந்தியாவில் இவர்கள் விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டனர் என்றும் படைப்பாளர் எழுதிச் செல்கிறார். தென்னிந்தியாவில் வேலை செய்வதற்கும் சாதிக் கட்டுப்பாடு உள்ளது. மலேசியாவில் சாதி வேறுபாடு இல்லாமல் வேலை செய்ய முடியும் என்றும் படைப்பாளர் எழுதியுள்ளார்.

எழுபத்தைந்து பக்கங்கள் கொண்ட இந்தக் குறுநாவலில் மணியம் என்ற கதைத் தலைவன் பறையனாக இருக்க வேண்டுமென்பதற்கான அவசியம் எதுவும் இருக்கவில்லை. அவனை ஒரு தென்னிந்தியன் என்று அறிமுகப்படுத்தியிருந்தாலே கதையில் எந்தப் பகுதிக்கும் ஊறு ஏற்படப் போவதில்லை. கதைப் போக்கைக் கருத்தில் கொண்டு பார்த்தால் தென்னிந்தியாவிலிருந்து வந்தவர்களைப் பறையர் என்று கூறியிருப்பது திட்டமிட்ட ஒரு இன இழிவாகவே தெரிகிறது.

இது முதல் தடவை அல்ல. இதற்கு முன்னும் பல பள்ளிப் பாட நூல்களில் ‘கஸ்டா பறையா’ என்ற தொடர் பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழர் வரலாறு, பண்பாடு, சமயம் பற்றி எப்போது எழுதப்பட்டாலும் மலாய் அறிஞர்களுக்கு ‘கஸ்டா பறையா’ என்ற ஒரு செய்தி மட்டுமே தெளிவாகக் கண்ணில் படுகிறது. இந்த அறிஞர்கள் அறிவார்ந்த ஆராய்ச்சியாளராய் இருப்பதைக் காட்டிலும் மலேசிய இந்தியர்களை வெறுத்து இழிவு செய்யும் இனவாதிகளாகவே தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றனர்.

இப்படிப் பள்ளிப் பாட நூல்களில் எழுதுவதன் நோக்கம் என்ன? இதனைப் படிக்கும் மலாய்க்கார மாணவர்கள் இந்திய மாணவர்களைக் கீழ்மக்களாகக் கண்ணோட்டமிட வேண்டும் என்பதும் இந்திய மாணவர்கள் தம்மைத் தாமே இழிந்தவர்களாகக் கருதும் தாழ்வு மனப்பான்மையுள்ளவர்களாக வளர வேண்டும் என்பதும்தான் இந்த எழுத்துகளின் நோக்கமாக இருக்க முடியும்.

இண்டர்லோக் என்னும் இந்தக் குறுநாவல் தொகுதியில் கெலுவார்க செமான், கெலுவார்க சிங் ஹுவட், கெலுவார்க மணியம், இண்டர்லோக் என்னும் நான்கு குறுநாவல்கள் அடங்கியுள்ளன. முதல் கதை இந்த நாட்டின் பூமிபுத்ராக்கள் வந்தவர்கள் வாழ்வதற்கு இடம் கொடுத்த நல்லவர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். சீனர்கள் அவர்கள் நாட்டில் ஏற்பட்ட வறுமையால் கப்பலேறி மலாயாவுக்கு வந்து மலாயாவின் வளத்தை எவ்வாறு பங்கிட்டுக் கொண்டனர் என்று காட்டியுள்ளனர். மூன்றாம் கதையில் வறுமை, சாதிக் கட்டமைப்பு ஆகியவற்றால் தென்னிந்தியர்கள் மலாயாவுக்கு வந்த கதையைக் கூறியுள்ளனர்.

இந்தியரும் சீனரும் மலாயாவுக்குப் பிழைக்க வந்தவர்கள் அல்லது வந்தேறிகள் என்ற கருத்தை மிகுந்த லாவகமாகப் படைப்பாளர் வலியுறுத்துகிறார். பிழைக்க வந்த இந்தியரும் சீனரும் இந்த நாட்டின் வளமைக்குக் கொடுத்த உயிர்க் கொடைகள் ஏராளம். இந்த உயிர்க் கொடைகளுக்குப் பின்னால் இருக்கும் கதைகள் ஆயிரம். இவற்றை எழுதாமல் மறைத்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் பிழைக்க வந்த கதையையும் அவர்களின் சாதீயக் கட்டமைப்பையும் மிகுதியாக விவரிப்பது ஏன் என்பதுதான் நமது கேள்வி.

தேசிய ஒருமைப்பாட்டை மையமாகக் கொண்டு நமது கல்விக்கொள்கை அமைந்துள்ளது. ஆனால் நடைமுறையில் ஒருமைப்பாட்டுக்கு எதிரான போக்கில் மலாய்க் கல்வியாளர்களின் போக்கு செயல்படுகிறது. வெறும் கண்டனங்களால் மட்டும் இப்படிப்பட்ட இன இழிவு பரப்புரைகளைத் தடுத்துவிட முடியாது. தமிழர் சமூக இயக்கங்கள் நூலை வெளியிட்டிருக்கும் தேசிய மொழி வளர்ப்பு நிறுவனத்துடனும் கல்வி அமைச்சுடனும் கலந்துரையாடல்கள் நடத்திப் பாட நூல்களில் இப்படிப்பட்ட பகுதிகள் இனியும் வராமல் இருக்க வழி செய்ய வேண்டும்.

- malaysiaindru

No comments:

Post a Comment